திங்கள், 12 டிசம்பர், 2016

இறை ஒளி”



இறை ஒளி”

இறைமகன் கிறிஸ்து இயேசுவின் பிறப்பு விழாவிற்கு இன்னமும் ஒரு சிலவாரங்களே உள்ள நிலையில். பலவித வெளிப்புற ஆயத்தங்களில் மும்முரமாக ஈடுபட்டுள்ள உண்மைக் கிறிஸ்தவனுக்கு இவ்வாயத்தங்கள் ஒரு விதத்தினில் தேவையே. எனினும், எம்மையும் எமது ஆன்மாவையும் தயார் செய்து கொள்வதற்கு ஏதுவான “இறை ஒளி” கிறிஸ்தவன் எனப்பெருமையோடு அழைக்கும் எமக்கு அவசியமா? என எம்மை நாமே வினாவலாம்.

“ஒளி” என்றால் என்ன? இதற்கான பதில...ை இன்றைய சிறு பிள்ளைகள் கூட வெகு சுலபமாகக் கூறிவிடும். ஆனால் "இறை ஒளியின்" உண்மையான கருத்தின் முக்கியத்து வத்தை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோமா? அல்லது தெரிந்திருந்தும் அதனைச் சரிவர உணராது வாழுகின்றோமா?

திருவிவிலியத்தைப் புரட்டுவோமானால், ஆதியிலே விண்ணையும் மண்ணையும் படைத்த கடவுள் “ஒளி தோன்றுக” (தொடக்க நூல் 1:3) என என்றுமே அழியாத முதல் மூன்று வசனங் களுக்குள் திருவாய் மலர்ந்துள்ள தனால், இறைவனின் வாயில் உருவான முதல் வாக்கி யமே “ஒளி” என்று கூட நாம் பொருள் கொள்ளலாம்.

இறைவன், ஆதியிலே மனிதனைத் தனது சாயலாகப் படைக்கு முன்னதாக ஒளியைப் படைத்து, அந்த ஒளியை நல்லது எனக்கண்டாரெனவும் (தொடக்க நூல் 1:3), மூவொரு கடவுள் இறை ஒளியாகவும் இருக்கின்றார் என நிரூபிக்கப்பட்டுள்ளதனை எவரும் மறுத்துரைக்க முடியாது.

ஆதியிலே முதலில் ஒளியை உருவாக்கிய இறைவன் தனது மக்களை மீட்டெடுப்பதற்காக எரியும் நெருப்பின் ஒளியாக மோயீசனுக்கு (விடுதலைப் பயணம் 3:2)காட்சி கொடுத்தார். பின்னர் பகலில் மேகத்தூணாகவும், இரவில் நெருப்புத்தூணாகவும் இருந்து ஒளியின் வழியாக நடத்திச்சென்றார் என விடுதலைப் பயணநூல் வழியாக நாம் அறிகின்றோம்.

“....ஆண்டவரே உமது முகத்தின் ஒளியை எம்மீது வீசச் செய்யும்” (திருப்பாடல் 4 : 6) “ஆண்டவரே என் ஒளி..... உமது ஒளியை வீசியருளும்” (திருப்பாடல் 42:3 )“.... இரவு முழுவதும் நெருப்பின் ஒளியினால் வழி நடத்தினார்” “....அவர்கள் உமது முகத்தின் ஒளியில் நடக்கின்றனர்” என்றும் அழியாத திருப்பாடல் நூலில் பரம்பொருளான இறைவனை அடையாளம் காண்கிறோம். ஏசாயா தீர்க்கதரிசி கூட “....எழுந்து ஒளி வீசு. ஏனெனில் உனது ஒளி வந்துவிட்டது..... ” எனப் பரலோக தகப்பனை ஒளியோடு ஒப்பிட்டுள்ளார்.

“...உலகிற்கு ஒளி நீங்கள் உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்வதாக...” என புனித மத்தேயுவும், “....இதுவே பிற இனத்தாருக்கு இருள் அகற்றும் ஒளி....” என புனித லூக்காவும், “......அவரிடம் வாழ்வு இருந்தது, அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது. அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது....” எனப் புனித யோவானும் நற்செய்தி ஏடுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

இறைமகன் இயேசுவின் ஒளி தமஸ்கு நகரில் சவுலை புனித பவுலாக மாற்றி பிற இனத்தாருக்கு நற்செய்தியை அறிவிக்கும் ஊழியனாக்கியது. அதே பவுலடியார் “...கிறிஸ்து இயேசுவே இறை மாட்சிமையின் அறிவொளி யாக இருக்கின்றார்...” என கொரிந்தியருக்கு எழுதிய திருமுகம் 4ம் அதிகாரம் 6ம் வசனத்தில் குறிப்பிடு கின்றார்.

புனித யோவானும் தமது முதல் திருமுகத்தில் “...கடவுள் ஒளியாய் இருக்கின்றார். அவர் ஒளியாய் இருப்பது போலவே நாமும் ஒளியில் நடப்போமானால் ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்ட வராவோம்.....” என 5 தொடக்கம் 7 வரையான திரு வசனங்களில் சாதாரன மனிதரான எமது அன்றாட வாழ்விற்கு இறை ஒளி எவ்வாறு அவசியம் என்பதனைத் தெட்டத் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார்.

இவ்வாறு, ஆதியிலே இறைவன் எதற்காக ஒளியை நல்லதெனக் கண்டு கொண்டார் என்பதற்கு வேதாக மத்தில் பல இடங்களிலே நாம் கண்டுகொள்ளக் கூடிய தாகவுள்ளது. எனவே, ஒளி நமக்காக அல்ல, மாறாக நாம் ஒளிக்காக உருவாகப்பட்டுள்ளோம் என்பதே உண்மை. ஏனெனில் ஒளி மயமான இறைவன் என்றோ ஒருநாள் நாம் தம்மிடம் திரும்பி வருவோம் என எதிர்பார்த்து எமக்காகக் காத்திருக்கின்றார்.

ஒளிமயமான தமது திருமகனை எல்லாம் வல்ல இறைவன் எமக்காகத் தந்திருக்கின்றார். எனவே, எமது ஆன்மாவின் புதுவாழ்விற்கு இறை ஒளி அவசியம் என்ற உண்மையை உணர்ந்தவர்களாக இறைமகன் கிறிஸ்து இயேசுவின் பிறப்பு விழாவினை அர்த்தமுள்ள முறையினில் கொண்டாடு"வதற்கு ஆயத்தங்கள் செய்வோம். நாம் ஒவ்வொருவரும் எமக்குப் புதுவாழ்வு வழங்கிடும் இறை ஒளியின் மக்களாக வாழ்ந்திட இன்றைய நாளில் முடிவு செய்வோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு