வெள்ளி, 7 ஏப்ரல், 2017

தவக்காலம் 5வது வாரம் சனிக்கிழமை



முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 5வது வாரம் சனிக்கிழமை
2017-04-08

முதல் வாசகம்

நான் அவர்களுடன் நல்லுறவு உடன்படிக்கை செய்துகொள்வேன்
எசேக்கியல் நூலிலிருந்து வாசகம் 37:21-28 21 அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ நான் இஸ்ரயேலர் சிதறுண்ட நாடுகளிலிருந்து அவர்களை அழைத்து எம்மருங்கினின்றும் கூட்டிச் சேர்த்து, அவர்களின் சொந்த நாட்டிற்குக் கொணர்வேன்.22 இஸ்ரயேலின் மலைகள்மிது அவர்களை ஒரே நாட்டினர் ஆக்குவேன். அவர்கள் எல்லாருக்கும் ஒரே அரசன் இருப்பான். அவர்கள் இனிமேல் ஒருபோதும் இரு நாடுகளாகவோ இரு அரசுகளாகவோ பிரிந்திரார்.23 அவர்கள் இனிமேல் ஒருபோதும் தங்கள் தெய்வச் சிலைகளாலோ இழிந்த அருவருப்பான பொருள்களாலோ தங்கள் வேறெந்தக் குற்றங்களாலோ தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பாவம் செய்த எல்லாக் குடியிருப்புகளிலிருந்தும் அவர்களை நான் மீட்டுத் தூய்மையாக்குவேன். அவர்கள் என24 என் ஊழியன் தாவீது அவர்களுக்கு அரசானய் இருப்பான். அவர்கள் அனைவருக்கும் ஒரே ஆயன் இருப்பான். என் நீதிநெறிகளின்படி அவர்கள் நடப்பர்: என் நியமங்களைக் கருத்தாய்க் கடைப்பிடிப்பர்.25 நான் என் ஊழியன் யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் மூதாதையர் வாழ்ந்ததுமாகிய நாட்டில் அவர்கள் வாழ்வர். அவர்களும் அவர்களின் மக்களும், மக்களின் மக்களும் அங்கு என்றென்றும் வாழ்வர். என் ஊழியன் தாவீது என்றென்றும் அவர்களின் தலைவனாய் இருப்பான்.26 நான் அவர்களுடன் நல்லுறவு உடன்படிக்கை செய்துகொள்வேன். அது அவர்களுடன் என்றென்றும் நிலைத்திருக்கும். நான் அவர்களை நிலைபெறச் செய்து அவர்களைப் பெருகச் செய்வேன். என் தூயகத்தை அவர்கள் நடுவே என்றென்றும் நிலைக்கச் செய்வேன்.27 என் உறைவிடம் அவர்கள் நடுவே இருக்கும்: நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்: அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர்.28 என் தூயகம் அவர்கள் நடுவே என்றென்றும் நிலைத்திருக்கையில், இஸ்ரயேலைத் தூய்மைப்படுத்துபவர் ஆண்டவராகிய நானே என வேற்றினத்தார் அறிந்து கொள்வர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்
எரேமியா 31:10-13 10 மக்களினத்தாடரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்: 'இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்: ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்' என்று சொல்லுங்கள்.

11 ஏனெனில், யாக்கோபை ஆண்டவர் மீட்டார்: அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார்.12 அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்: தானியம், திராட்சை இரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுகாலிகள், ஆகிய ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள்: அவர்களது வாழ்க்கை நீர்வளம் மிக்க தோட்டம் போல் இருக்கும்: அவர்கள் இனிமேல், ஏங்கித் தவிக்க மாட்டார்

13 அப்பொழுது கன்னிப்பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்: அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்: அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்: அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்: துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன்.


நற்செய்திக்கு முன் வசனம்

இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11:45-57 45 மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.46 ஆனால் அவர்களுள் சிலர் பரிசேயரிடம் சென்று இயேசு செய்ததைத் தெரிவித்தனர்.47 தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, ' இந்த ஆள் பல அரும் அடையாளங்களைச் செய்து கொண்டிருக்கிறானே, என்ன செய்யலாம்?48 இவனை இப்படியே விட்டுவிட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்து விடுவார்களே! ' என்று பேசிக் கொண்டனர்.49 கயபா என்பவர் அவர்களுள் ஒருவர். அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்தார். அவர் அவர்களிடம், ' உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.50 இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை ' என்று சொன்னார்.51 இதை அவர் தாமாகச் சொல்லவில்லை. அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்ததால், இயேசு தம் இனத்திற்காவும்,52 தம் இனத்திற்காக மட்டுமின்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார்.53 ஆகவே, அன்றிலிருந்தே அவர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினார்கள்.54 அது முதல் இயேசு யூதரிடையே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் அவ்விடத்தினின்று அகன்று பாலை நிலத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போனார்; அங்கு எப்ராயிம் என்னும் ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார்.55 யூதர்களுடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. விழாவுக்கு முன் தங்கள் தூய்மைச் சடங்குகளை நிறைவேற்றப் பலர் நாட்டுப் புறங்களிலிருந்து எருசலேமுக்குச் சென்றனர்.56 அங்கே அவர்கள் இயேசுவைத் தேடினார்கள். ' அவர் திருவிழாவுக்கு வரவே மாட்டாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ' என்று கோவிலில் நின்றுகொண்டிருந்தவர்கள் தங்களிடையே பேசிக் கொண்டார்கள்.57 ஏனெனில் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் இயேசுவைப் பிடிக்க எண்ணி அவர் இருக்கும் இடம் யாருக்காவது தெரிந்தால் தங்களிடம் வந்து அறிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இன்றைய சிந்தனை

''தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி,... 'இவனை இப்படியே விட்டுவிட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே!' என்று பேசிக்கொண்டனர்'' (யோவான் 11:47-48)

மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டதற்குப் பல காரணங்கள் இருந்தன. சிலர் இயேசு புரிந்த அதிசய செயல்களைக் கண்டு வியந்தார்கள். கடவுளின் வல்லமையோடுதான் அவர் இச்செயல்களைச் செய்தார் என அவர்கள் ஏற்றனர். வேறு சிலர் இயேசு முன்னாளைய இறைவாக்கினர் போல போதித்துச் செயல்பட்டதைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொண்டனர். இன்னும் சிலர் இயேசுவிடம் துலங்கிய இரக்க குணம், அனைவரையும் மன்னித்து ஏற்கும் தன்மை, ஏழைகளைச் சார்ந்து செயல்படல், நோயுற்றோருக்கு நலமளித்து அவர்களைச் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்கச் செய்தல் போன்ற செயல்பாடுகளைக் கண்டு, அவரிடம் நம்பிக்கை வைத்தனர். ஆனால் வேறுசிலரோ இயேசுவை ஏற்க மறுத்தனர். இவர்கள் பெரும்பாலும் அக்காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்களே. சமய அதிகாரிகள் இயேசுவை யூத சமயத் துரோகியாகக் கண்டனர். அரசியல் அதிகாரிகள் அவர் ஆதிக்கத்திற்கு உலைவைக்கப்போகிறாரோ என எண்ணி அஞ்சினர்.

ஆனால் சாமானிய மக்கள் இயேசுவை ஏற்கத் தயங்கவில்லை. அவர்களுடைய இதயத்தில் நெகிழ்ச்சி இருந்தது. கடவுளின் வார்த்தையைக் கேட்கின்ற மனநிலை அவர்களிடத்தில் துலங்கியது. குறிப்பாக, ஏழைகளும் அக்காலத்தில் பாவிகளாகக் கருதப்பட்டவர்களும் இயேசு தங்களுக்கு நன்மை செய்யவே வந்துள்ளார் என்பதை எளிதில் கண்டுகொண்டனர். அவர்கள் இயேசுவைத் தேடிச் சென்றனர்; அவருடைய சொல்லிலும் செயலிலும் கடவுளின் வல்லமையையும் அன்பையும் கண்டனர். இன்று வாழ்கின்ற நாம் இயேசுவை எவ்வாறு அணுகுகின்றோம்? நம் இதயம் திறந்திருக்கிறதா அல்லது அடைபட்டிருக்கிறதா? இயேசுவின் குரல் நம் உள்ளத்தில் ஒலிக்க ஒருபோதும் தவறுவதில்லை; நாம்தான் அக்குரலுக்குச் செவிமடுக்க முன்வருவதில்லை.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் உம் உடனிருப்பை உணர்ந்திட அருள்தாரும்.

தவக்காலச் சிந்தனை: உண்மை தரும் விடுதலை


தவக்காலச் சிந்தனை: உண்மை தரும் விடுதலை
‘உண்மை விடுவிக்கும்’ என்பது யாவரும் அறிந்ததே. வாழ்வின் எந்நிலையிலும், நாம் உண்மையின் பக்கம் இருக்கும்போது, துன்ப துயரங்கள் வந்தாலும், இறுதியில், நம்மை விடுவிப்பது இந்த உண்மையே. உண்மை, நம்மை, தண்டனையிலிருந்து மட்டுமின்றி, பாவத்திலிருந்தும் விடுவிக்கிறது. இயேசுவும் இன்று இதையே வலியுறுத்துகின்றார். இது, ஆன்மீக விடுதலை. பழி பாவ கண்டனத்திலிருந்து நம்மை விடுவிப்பது, இந்த உண்மை. எவ்வாறு இதை கைக்கொள்வது? முதலில், நாம் நமக்கு உண்மையாக இருத்தல் வேண்டும். நம் மனசாட்சிக்கு உண்மையாக இருத்தல் வேண்டும். பல நேரங்களில், நமது இரட்டை வேடம் நம்மிடமிருந்து துவங்குகிறது. உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசும் சமூகத்தில், 'மனசாட்சிக்கு உண்மையாக நட' எனக்கூறுவது, கேலிக்கூத்தாகிறது. கடவுளுக்கும், மனசாட்சிக்கும் பயந்த காலம் போய் இன்று, CCTV கேமராக்களுக்கு பயப்படும் காலம் என மாறி விட்டது. அரசியல் இலாபங்களுக்காக, மனசாட்சியை மழுங்கடிக்கும் அரசியல்வாதிகளால், இன்று தமிழகம் சந்திக்கும் சவால்கள், இதற்கு ஒரு சாட்சி. மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் திட்டங்களை, வெறும் அரசியல் இலாபத்திற்காகத் திணிக்க முற்படும் இன்றைய அவல நிலையில், உண்மையில், விடுதலை என்பது, புரியாத புதிர்தான். நமக்கும் பிறருக்கும் உண்மையாக இருக்கும்போது, வாழ்வில், புதுமைகள் வழி ஆண்டவர் அருள் வழங்குவார். உண்மை, நம்மிலும் நம்மை ஆள்வோரிடத்திலும் உயிர் பெற்றிட, இத்தவக்காலத்தில் வேண்டுவோம். மனதின் உண்மையே, மானுடத்தின் நன்மை. -அருள் சகோதரர் இராசசேகரன் சே.ச. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-05 01:11:45]

இளையோருடன், திருத்தந்தை மேற்கொள்ளும் திருவிழிப்பு வழிபாடு


இளையோருடன், திருத்தந்தை மேற்கொள்ளும் திருவிழிப்பு வழிபாடு

ஏப்ரல் 9, குருத்தோலை ஞாயிறன்று கொண்டாடப்படும் 32வது உலக இளையோர் நாளுக்கு முந்திய நாள், சனிக்கிழமை, உரோம் மறைமாவட்டம், மற்றும், இலாசியோ பகுதி மறைமாவட்டங்களைச் சேர்ந்த இளையோருடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருவிழிப்பு வழிபாட்டை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 8, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு, புனித மேரி மேஜர் பசிலிக்காவில் நடைபெறவிருக்கும் இந்த திருவிழிப்பு வழிபாடு, இளையோரை மையப்படுத்தி, 2018ம் ஆண்டு, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கும், 2019ம் ஆண்டு, பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்கும் முன்னேற்பாடாக மேற்கொள்ளப்படும் முதல் முயற்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயேசுவின் திருத்தூதர்களில், மிக இளையவரும், இயேசுவால் அன்பு செய்யப்பட்டவருமான புனித யோவான், இத்திருவிழிப்பு வழிபாட்டின் மையப்பொருளாகவும், அடையாளமாகவும் இருப்பார். ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்பு குழுவும், பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையும் இணைந்து, இந்த திருவிழிப்பு வழிபாட்டை நடத்துகின்றன. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி)

இயேசு - ”குருத்துவம்” மற்றும் ”நற்கருனண” ஏற்படுத்திய நாள் கடைசி இரா உணவுத் திருப்பலி



திருவழிபாடு Readings, Introduction, Prayer Intentions

இயேசு - ”குருத்துவம்” மற்றும் ”நற்கருனண” ஏற்படுத்திய நாள் கடைசி இரா உணவுத் திருப்பலி
(13.04.2017)
ஆண்டு - A
(இன்றைய வாசகங்கள்: விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 12: 1-8, 11-14 ,திபா 116: 12-13. 15-16. 17-18 ,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 23-26 ,+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-15 )

(PDF Format இணைக்கப்பட்டுள்ளது)
www.tamilcatholicnews.com


திருப்பலி முன்னுரை

இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நம்மீது பேரன்பும், இரக்கமும் உடையவரான இறைத் தந்தையின் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
இன்று புனித வியாழன். இஸ்ராயேல் மக்களின் விடுதலைப் பயணத்தையும், இறைவனின் இரக்கத்தையும் நமக்கு நினைவூட்டும் நாள். தனது பணியைத் தொடர்ந்து செய்ய, இயேசு பணிக்குருத்துவத்தையும், தனது தொடர் பிரசன்னத்தை உறுதிப்படுத்த நற்கருணையையும் ஏற்படுத்திய தூய நாள். பிறர் வாழத் தன்னையே இழப்பதுதான் தலைசிறந்த அன்பு என்பதை மகத்துவமான திருவருட் சாதனங்கள் வழியாக நமக்கு உணர்த்திய நாள்.
பணி வாழ்வு என்பது தாழ்மையோடு இறைவனின் சித்திற்கு ஏற்றபடி வாழ்வதே என்பதையும், தாழ்மையும் அர்ப்பணமுமே அருள்வாழ்வின் ஏற்றமிகு அடையாளங்கள் என்பதையும் சீடர்களின் பாதங்களைக் கழுவிப் பாடம் சொல்லித் தந்த அற்புதமான நாள். தமது இந்த மீட்பின் பணியினை இன்றும் தம் குருக்கள் வழியாக இயேசு நிறைவேற்றி வருகின்றார். குருத்துவம் இறைவன் நமக்குத் தந்த பெரும் கொடை. இந்தக் கொடைக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். குருத்துவப் பணியாளர்கள் அனைவருக்காகவும் செபிப்போம். தாழ்ச்சி என்னும் கொடையினை நாமும் பெற்றுக் கொள்ள இத் திருப்பலியல் மன்றாடுவோம்.


முதல்வாசகம்
இது `ஆண்டவரின் பாஸ்கா'
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 12: 1-8, 11-14

எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்: உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்: அவர்கள் இம்மாதம் பத்தாம் நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும். ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம். இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும். இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும். இறைச்சியை அந்த இரவிலேயே உண்ண வேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும். நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து, விரைவாக உண்ணுங்கள். இது `ஆண்டவரின் பாஸ்கா'. ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள் மேல் வராது. இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறைதோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி


பதிலுரைப்பாடல்
பல்லவி: கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்வதே.
திபா 116: 12-13. 15-16. 17-18

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். பல்லவி
ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. ஆண்டவரே, நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். பல்லவி
நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். பல்லவி


இரண்டாம் வாசகம்
இதை என் நினைவாகச் செய்யுங்கள்
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 23-26

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, ``இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்'' என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, ``இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்'' என்றார். ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர்.
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-15

பாஸ்கா விழா தொடங்க இருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது. இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல் அவரிடமே திரும்பச் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்தவராய், இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார். சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், ``ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?'' என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ``நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்துகொள்வாய்'' என்றார். பேதுரு அவரிடம், ``நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்'' என்றார். இயேசு அவரைப் பார்த்து, ``நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை'' என்றார். அப்போது சீமோன் பேதுரு, ``அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்'' என்றார். இயேசு அவரிடம், ``குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மை யாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை'' என்றார். தம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் `உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை' என்றார். அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: ``நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் `போதகர்' என்றும் `ஆண்டவர்' என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்'' என்றார்.

-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
-கிறிஸ்துவே உமக்கு புகழ்



விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


பணிவிடை புரியவே வந்தேன் என்று சொன்ன இறைவா!
திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, அவரோடு இணைந்து பணியாற்றும் ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரையும் உடல் உள்ள ஆன்ம நலனோடு வாழவும், இறைமக்களை ஒருவருக்கொருவர் பணிபுரிந்து வாழ்பவர்களாக வழிநடத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

என்றும் வாழ்பவரே இறைவா,
நீர் சீடர்களின் பாதங்களை கழுவி அன்பின் முக்கியத்துவத்தை முழுçமாயக எங்களுக்கு உணர்த்தினீர். இதை உணர்ந்து, உமது அன்பின் அடிச்சுவட்டில் நாங்கள் தொடர்ந்து நடக்கவும், எங்களுடைய உள்ளத்தையும், சிந்தனைகளையும் பிறருக்கு அர்பணித்திடவும் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

ஒப்பற்ற குருவே!
தனிக்குருத்துவத்தில் உம் பணி செய்யும் குருக்கள் யாவரும் தங்களது வாழ்வில் எதிர்கொள்ளும் போரட்டங்களில் வெற்றிக்கொள்ள தேவையான மன உறுதியைçயும், ஆற்றலையும் தந்து வழிநடத்திடவும், பொது குருத்துவத்தில் உமது வழி வாழ அழைப்பு பெற்ற இறைமக்களும் அவ்வாறே வாழ்ந்திடவும் வரம்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

நிறைவு தருபவரான இறைவா,
நாங்கள் ஆன்மீக வாழ்வில் வளம் பெற திருவருட்சாதனங்கள் தனிப் பெரும் கொடைகள் என்பதை உணர்ந்து அவைகளப் போற்றி வாழ்ந்திடவும் அவற்றின் பலன்களை எங்கள் அன்பின் சேவைகள் வழியாக அனைவருக்கும் வழங்கிடவும் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா!
பணிவிடை பெறுவதற்கன்று பணிவிடை புரியவே வந்தேன் என்ற இயேசுவின் மன நிலையைப் பின்பற்றி, தலைவர்கள் யாவரும் தன்னலமின்றி தொண்டாற்றும் மனப்பக்குவத்தைப் பெற்று பணியாற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கும் தந்தையே இறைவா!
பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வேதனையோடும், கவலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்களைக் குணப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இறைத் தந்தையே
இறைத் தந்தையே உமது மக்கள் குருத்துவத்தின் மேன்மையை உணர்ந்து இறை அழைத்தலுக்குத் தம்மை அர்ப்பணிக்கவும், குருக்களை அன்புடன் இயேசுவின் சீடர்களாக மதித்து வாழ்ந்திடவும் வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



இன்றைய சிந்தனை

ஆண்டவரின் இராவுணவு !
ஆண்டவர் இயேசு நற்கருணை, குருத்துவம், அன்புக் கட்டளை என்னும் மூன்றையும் ஏற்படுத்திய சிறப்பான ஓர் இரவை இன்று கொண்டாடுகிறோம்.
இயேசு தமது தன்மதிப்பை, மாண்பை ஒப்புக்கொடுத்தார்: மனித ஆளுமையின் இன்னொரு பரிமாணம் தன் மதிப்பு. ஒவ்வொரு மனிதருக்கும் தன்னைப் பற்றிய மதிப்பு, மாண்பு இருக்கிறது. தன்னைப் பிறர் மதிக்க வேண்டும், மாண்புடன் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அத்துடன், அந்த மாண்பு மீறப்படும்போது வருந்துகிறோம், கோபம் கொள்கிறோம்..
இயேசுவும் தன் மதிப்பு மிக்கவராக இருந்தார். தலைமைக் குருவின் காவலன் அவரைக் கன்னத்தில் அறைந்தபோது, அதைத் தட்டிக்கேட்டார் (யோவா 18:22-23). ஆனாலும், அவர் தன் சீடர்களின் கால்களைக் கழுவ முன் வந்தார். “நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே, ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்” (யோவா 13:14) என்றார். “தம்மைத் தாழ்த்துகிறவர், உயர்த்தப்படுவார்” என்று அவரே மொழிந்ததற்கேற்ப, தன்னை அவர் தாழ்த்திக்கொண்டார். அவருடைய தாழ்ச்சியைப் பவுலடியார் இவ்வாறு புகழ்கிறார்: “சாவை ஏற்குமளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்குமளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்” (பிலி 2:8). ஆகவேதான், கடவுள் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். “அவர் இறைமகனாயிருந்தும் துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்’ (எபி 5:8-9) என்று எபிரேயர் திருமடல் அவரது கீழ்ப்படிதலைப் புகழ்கிறது..
கீழ்ப்படிதலில், தாழ்த்திக் கொள்வதில் நாம் நம் ஆணவத்தை, அகந்தையை, இறுமாப்பை இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கிறோம். இயேசு நமக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகிறார். அவர் அடிமையின் தன்மை பூண்டு, சீடர்களின் கால்களைக் கழுவிய நிகழ்வை நினைவுகூரும் இன்று, நாமும் நம் ஆணவத்தை, பெருமையை, இறுமாப்பை இறைவனுக்கு ஒப்புக்கொடுப்போமாக!

மன்றாட்டு:

எங்களுக்காக உம்மை முழுதும் ஒப்புக்கொடுத்த இயேசு ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நீர் உமது உடல், மனம், ஆன்மா, உணர்வுகள், இவற்றோடு உமது தன் மதிப்பையும், மாண்பையும்; இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து, முற்றிலும் இறைவனுக்கு உகந்தவராக வாழ்ந்ததுபோல, நாங்களும் முற்றிலும் உமக்கே சொந்தமானவர்களாய் வாழ்வோமாக ! எங்கள் தான்மையை, தன்னலத்தை, அகந்தையை ஒப்புக்கொடுத்து, பிறருக்குப் பணிவிடை செய்து வாழ்வோமாக! ஆமென்.

Web Design Team,
Tamil Catholic Chaplaincy,
Laurentiusberg 1,
45276 Essen,
Germany.



http://www.tamilcatholicnews.com
http://www.tamilcatholic.de
http://www.facebook.com/tamilcatholicsgermany
https://www.facebook.com/goodnewsofjesuschrist
http://www.youtube.com/tamilenseelsorgeamt
http://groups.google.com/group/tamilenseelsorge